மெஹர்
பிரபஞ்சனின் யாசுமின் அக்கா சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதை பாயம்மா. இஸ்லாமிய நெறி தவறாமல் இறையச்சத்துடன் வாழும் குடும்பம் பாயம்மாவினுடையது. ஒரு மகள். அவளுக்கு சில ஆண்டுகள் வயதில் இளைய ஒரு மகன். மகளின் திருமணம் தவிர அல்லாஹ்விடம் வேறு கோரிக்கை ஏதும் மெஹருக்கு (பாயம்மா) இல்லை. ஆனால் நகைக்கடை விற்பனையாளனான அவள் மகனின் சொற்ப வருமானத்தில் யாசுமினின் திருமணத்தை நடத்துவதா, ஒழுகும் வீட்டுக் கூரையை சரி செய்வதா? ஏழ்மை எப்போதும் விருந்தாளியாய் தங்கியுள்ள அந்த வீட்டில் எளிய ஆசைகளும் பெருங்கனவுதான். இறுதியாய் யாசுமினுக்கு ஒரு வரன் அமைகிறது. சேர்த்து வைத்த சிறிது நகைகள் நம்பிக்கை அளித்தாலும் ரொக்கம், நிக்காஹ் செலவு, நிக்காஹ்க்கு முன் கூரை வேய என பணத் தேவை கூடுகிறது. பாயம்மாவின் தன் துயரங்களை மகன் மேல் ஏற்றுகிறாள். அவன் வயதில் சிறியவன். தாயின் சுமைகளைத தான் சுமக்கும் அன்பு நிறைந்தவன். ஆனால் இந்த தொகை அவன் சத்துக்கும் மீறியதாயிற்றே? மார்க்க வழி வந்த ஒழுக்கம், நேர்மை எல்லாம் அவன் தேவைகளுக்கு முன் மெதுவாய் கரைகிறது. அவன் நேர்மையின் மீது அபார நம்பிக்கை கொண்ட அவன் முதலாளியிடம் திருடுகிறான்.