தவறுகளின் பொது வரலாறு
முதலில்அந்த தவறு, தவறு என்று தெரியாமல் யாராலோ தவறுதலாகத்தான் செய்யப்பட்டது.. பின்பு ஒரு நாள், யாரோ ஒருவன் அதற்க்கு தவறு என்று பெயரிட்டான். பெயரை அதன் மீதே எழுதியும் வைத்தான் பின்னர் அது வெகுநாட்களாய் தவறு என்ற பெயருடனேயே எல்லோராலும் செய்யப்பட்டு வரலானது. ஊருக்கு புதியவன் யாரேனும் ஒருவன் அதன் மீது எழுதப்பட்ட பெயரை உரக்க படித்துவிடுவது மட்டுமே சங்கடமாய் இருந்தது. ஒருவழியாய் தவறு எனும் பெயர்மீது பழுப்பு காகிதம் ஒட்டி பயன்படுத்தும் முறை பரவலானது. பழுப்புக் காகிதத்தை எவனும் கிழிக்காதிருக்க பாதுகாப்பும் போடப்பட்டபின் எல்லாம் இயல்பானது. பழுப்பு காகிதத்தின் உள்ளே என்ன உள்ளதென்று பாடங்கள் பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதுடன் தவறுக்கு பெயரிட்டவனின் வாழ்க்கை வரலாறும் விரிவாக கற்ப்பிக்கப்பட்டது. பாவம், முதன் முதலில் அதை செய்தவன் மட்டுமே அது தவறு என்று தெரியும் முன்னரே தவறிவிட்டான்..