Posts

Showing posts from September, 2019

மாரியம்மன் கோயில் தெரு மாயவினாயகர் மகாத்மியமும் 90's கிட்ஸ் வாழ்க்கையும்

Image
ஒரு செப்டம்பரின் மாலை நேரம், அனேகமாக  1996 ஆக இருக்கலாம். சந்தைத் தோப்பு மைதானத்தில் நானும் தெரு நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிக்  கொண்டிருந்தோம். விளையாட்டு தொடங்குவதற்கு முன்பான பேச்சு ராஜவீதிப் பையன்கள் வைக்கும் பிள்ளையார் சிலை குறித்தானதாக இருந்தது. ராஜவீதியின் குடும்பங்கள் ஓரளவு வசதியானது. அவர்களில் பெரும்பாலோர் பெங்களூரில் சொந்தங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பிள்ளையார் சிலை வைக்கும் பழக்கம் பெங்களூர் நகரத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம். அந்த பையன்களும் அவர்கள் வைக்கும் சிறிய பெயிண்ட் சிலைகள் பெங்களூரிலிருந்து வாங்கி வரப்பட்டதாகச் சொல்லுவார்கள். 3 நாட்களோ அல்லது 5 நாட்களோ தினமும் இரவில் பூசை செய்வார்கள். கடைசி நாள் சிலையை நன்கு அலங்கரித்து சைக்கிள் கேரியரில் வைத்து ஏதேதோ புரியாத கன்னட கோசங்களுடன் ஊர்வலம் வருவார்கள். கடைசியாக பிள்ளையார் கோயில் கிணற்றிலோ அல்லது அன்புபிரியாள் கோயில் கிணற்றிலோ சிலையைப் போட்டுவிட்டு பிரசாதம் தருவார்கள்.இந்த மொத்த நிழ்வுகளும் பெரியவர்கள் தலையீடின்றி சிறுவர்களே செய்வார்கள். "அவங்க எல்லா வீட்டிலயும் காசு வசூல் பண்றாங்கடா" என்று மணி சொன்னபோது