மண் பயனுற வேண்டும்: தாயிடம் வேண்டல்
மானுடனாய் இந்த தேசத்திலே -எந்த மாதவத்தாலோ நான் பிறந்தேன் மானத்திலே உயர் பாரதத்தாய் -அவள் மடியினில் தவழும் வரம் அடைந்தேன் எத்துனை மதங்கள் எத்துனை இனங்கள் எத்துனை நிறங்கள் அவளிடத்தில் -பின் எத்துனை மொழிகள் எத்துனை வழிகள் எத்துனை விழிகள் அவள் முகத்தில்..! ஐயிறு திங்களே எனைச் சுமந்தாள் -இங்கு அணைத்தெனை வளர்த்திட்ட அன்னையவள் ஆயுளெல்லாம் என்னை சுமக்கின்ற -இந்த அருட்பெரும் தாய்க்குநான் ஏது செய்வேன்..? தேடியே எங்கெங்கோ அலைந்து கண்ட-என் தெய்வமே நீதான் பாரதமே -உனை வாழ்த்திட வார்த்தைகள் எனக்கில்லை -தலை வணங்கிட மட்டுமே நானறிவேன் அன்னை பாரத தேவியளே -இங்கு உன்னை நினைக்கவே உயிர் சுமந்தேன் மணியே, மாதே.. மாசற்றோய் -என் மண்ணே உனை நான் வேண்டுகிறேன் மண் பயனுறுமொரு வாழ்வு கொண்டால்-அதில் என்துயர் யாவையும் நான் மறப்பேன்-இந்த மானுடம் பயனுறும் வாழ்வு தவம் -அதை மறுக்கா தெனக்கே வரமருள்வாய்..